×

திருவிழாக்களில் அனைவரையும் அனுமதிக்கவேண்டும் கோயிலில் யாருக்கும் முதல் மரியாதை இல்லை: உறுதி செய்ய தலைமை நீதிபதி அமர்வு அதிரடி உத்தரவு

மதுரை: கோயில் திருவிழாவில் அனைவரையும் அனுமதிக்க வேண்டும். யாருக்கும் முதல் மரியாதை இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டுமென தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா மல்லாக்கோட்டையைச் சேர்ந்த ஜெயந்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் கிராமத்தில் பல்வேறு சமூகத்தினர் வசிக்கின்றனர். சாந்தி வீரன்சாமி கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலில் தக்கார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனி திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் 8 நாட்கள் திருவிழா நடக்கும்.

கடந்த 2020ம் ஆண்டில் அறநிலையத்துறை கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது என்ற அறிவிப்பை எதிர்த்தும், தலைப்பாகை அணிந்து, குடை பிடித்து ஊர்வலம் செல்லவும், முதல் மரியாதையும் கோரிய மனு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது. முதல்மரியாதை கேட்பவர்களால் இந்த ஆண்டு திருவிழாவில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. திருவிழா காலங்களில் இக்கிராமத்தைச் சேர்ந்த எஸ்சி – எஸ்டி பிரிவினரை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. எனவே, ஆனி மாத திருவிழாவில் தலைப்பாகை அணியவும், குடை பிடிக்கவும் முதல் மரியாதை வழங்கக் கூடாது என்றும், எஸ்சி – எஸ்டி சமூகத்தை சேர்ந்தவர்களை திருவிழா காலத்தில் கோயிலுக்குள் அனுமதிக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா, நீதிபதி சுப்பிரமணியன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் வக்கீல் ஆனந்தமுருகன் ஆஜராகி, ‘‘திருவிழா காலத்தில் குறிப்பிட்ட பிரிவினரை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது என்பது பாகுபாடு காட்டுவதாக உள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘கோயில்களில் அனுமதி மறுப்பது மற்றும் முதல் மரியாதை தொடர்பாக ஏற்கனவே பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகள் முறையாக அமல்படுத்துவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். முந்தைய உத்தரவுகளை பின்பற்றி கோயில்களில் அனைவரையும் அனுமதிப்பது, யாருக்கும் முதல் மரியாதை இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

The post திருவிழாக்களில் அனைவரையும் அனுமதிக்கவேண்டும் கோயிலில் யாருக்கும் முதல் மரியாதை இல்லை: உறுதி செய்ய தலைமை நீதிபதி அமர்வு அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Justice ,Madurai ,Dinakaran ,
× RELATED விவாகரத்து வழக்குகளில் விசாரணையை...